இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும்: வாசன்

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியாவிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வர இருக்கின்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களுக்கு எந்தவிதத்திலும் எப்பிரச்சினையும் வரக்கூடாது என்பதை இலங்கை பிரதமரிடம் இந்தியா உறுதிபட தெரிவிக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கான உரிமையை அளிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 133 விசைப்படகுகளை திரும்ப ஓப்படைக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பனவற்றை பிரதமர் மோடி இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில் ஒப்பந்தம் அமைய வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *