ஆளும் கட்சிக்குள் நடக்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்: வாசன்

ஆளும் கட்சிக்குள் நடக்கும் ஏட்டிக்கு போட்டி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் நிகழ்வுகள் குறிப்பாக ஆளும் அதிமுக வின் உட்கட்சிக்குள்ளேயே ஏற்பட்டிருக்கிற ஆட்சி, அதிகாரம் குறித்த விவகாரங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதிமுகவில் இருக்கின்ற இரு தரப்பினரும் தங்களது நிலையை ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டு நியாயப்படுத்த நினைக்கிறார்கள்.

இதனால் வாக்களித்த மக்கள் விரும்பாத நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நிலையான முதல்வரும் இல்லை, நிரந்தர ஆளுநரும் இல்லை என்ற நிலையே தற்போது உள்ளது. இதற்கு காரணம் மாநில அரசும், மத்திய அரசும் தான். இது போன்ற அசாதாரண அரசியல் சூழலின் காரணமாக தமிழகத்தில் நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய், நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழி வகுத்திருக்கிறது.

பொதுவாக அனைத்து துறைகளும் செயல்படாமல் – செயலிழந்து இருக்கிறது. இதனால் தமிழக வளர்ச்சி குன்றிருப்பதோடு, பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மீண்டும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கான நலத்திட்டப் பணிகள் தொடர வேண்டும். ஆட்சியில் சிரத்தன்மை இருக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்ல நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.

ஆளும் கட்சிக்குள் நடக்கும் ஏட்டிக்கு போட்டி அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

தமிழக ஆளுநர் உண்மை நிலையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்கள் நலன், தமிழக முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *