தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நீர்நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் ஏரிகளைப் புனரமைக்க ரூ.2,500 கோடியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரசுக்குச் சொந்தமான கிணறுகளை ஆழப்படுத்தி, தண்ணீர் தொட்டிகளைச் சேதமில்லாமலும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும்.
ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாகப் பராமரிக்க வேண்டும்.
நீர் ஆதாரங்களை முழுமையாகக் கண்காணிப்பதால் கனமழை, வெள்ளம் ஏற்படுகின்ற காலங்களில் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க முடியும்.
நீர்நிலைகளை பராமரிக்கும் பணிக்கு ஏழைகளைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகும் என்று வாசன் கூறியுள்ளார்
