சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல்: ஜி. கே. வாசன் கண்டனம்

சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சட்டப்பேரவையில் ஜனநாயகம் கேலிகூத்தாக மாறி இருக்கிறது. மக்கள் மன்றத்தை நாடி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே சரியான தீர்வாக இருக்கும். சட்டப்பேரவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஆளுநர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சட்டமன்றத்தை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு.

சட்டப்பேரவையில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பது ஆளுங்கட்சியின் பலவீனத்தையே எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *