தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளுக்கு ஏற்கனவே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் 2016ம் ஆண்டில் ஓய்வுபெற்ற பிறகு இதுவரையில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு யாரும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் 8 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட வேண்டும். இந்நிலையில் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு, தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த 5 நீதிபதிகளை தேர்ந்தெடுத்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்த பட்டியலில் தமிழக நீதிபதிகள் இடம்பெறவில்லை என்பது தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி, முன்னோடியாக விளங்கிக்கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் பெயர் தற்போது பரிந்துரைக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
ப்ளஸ்: சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பதவிகளின் எண்ணிக்கை 75. தற்போது 57 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர். மீதி 18 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
