டெல்டா மாவட்டங்களில் நடக்கவுள்ள சம்பா சாகுபடிக்காக விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
”டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திறந்துவிடப்பட்ட தண்ணீர் செல்லும் வழிகளில் வீணாகிவிடாமல், கடைமடை வரை சென்று சேர்ந்தால்தான் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
எனவே, கடைமடை வரை தண்ணீர் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா பயிர் சாகுபடி டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான உரம், தரமான விதை நெல், இடுபொருட்களை அரசு உரிய காலத்தில் இலவசமாக வழங்க வேண்டும்.
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சம்பா சாகுபடி நடைபெறுகிறது. அதற்கான மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.
சம்பா சாகுபடிக்காக கரும்பு விவசாயிகளுக்கு தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் தர மறுக்கிறார்கள் எனவே, தற்போது நடைபெற இருக்கும் சம்பா சாகுபடிக்கு அரசு நிபந்தனையற்ற முறையில் கடன் தொய்வின்றி வழங்க வேண்டும்.
சம்பா சாகுபடிக்கு நவீன நுட்ப முறையை விவசாயிகள் பயன்படுத்தினால், ஒற்றை நாற்று நடவு முறையின் மூலம் , 1 ஏக்கருக்கு குறைந்தது 3 முதல் 4 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.
இதற்காக விவசாயிகளுக்கு நவீன களையெடுக்கும் கருவிகளையும், ஒரு ஏக்கருக்கு ரூபாய் 5 ஆயிரம் மானியமும் அரசு வழங்க வேண்டும்” என்று ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
