கலைத் துறையில் ஏ.நடராஜன் ஒரு களஞ்சியம்: ஜி.கே.வாசன் புகழாரம்

கலைத் துறையில் ஒரு களஞ்சியமாக விளங்கியவர் அகில இந்திய வானொலி மற்றும் சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏ.நடராஜனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி தொகுத்த “நெஞ்சில் நிறைந்த ஏ.என்.’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை மைலாப்பூரில் உள்ள பிரம்ம கான சபாவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நூலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட, அதன் முதல் பிரதியை மறைந்த ஏ.நடராஜனின் புதல்வர் ஏ.என்.செந்தில் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் வாசன் பேசியதாவது:
சென்னை தொலைக்காட்சி மிகவும் சிறப்பாகச் செயல்பட அடித்தளம் அமைத்தவர் ஏ.நடராஜன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நகர்வலம்’ என்ற நிகழ்ச்சி மூலம் எல்லோராலும் அவர் அறியப்பட்டார். எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவினார்.
நல்ல இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் தரத்தை உயர்த்தினார். கலை நுணுக்கங்களை நன்கு அறிந்ததுடன் மட்டுமல்லாமல் பன்முக கலைஞராகத் திகழ்ந்தார். அறிவு, திறமை, உழைப்பு, பொறுமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அரிய குணங்களை ஏ.நடராஜன் பெற்றிருந்தார்.
இன்று (பிப்.13) உலக வானொலி தினம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் அவருக்கு இத்தகைய நூலை வெளியிடுவது, ஏ.நடராஜனின் நட்புக்கு கிடைத்த இறைவனின் பரிசு என்றார் வாசன்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நடிகர் எஸ்.வி.சேகர், ராணி வார இதழ் அ.மா.சாமி, எழுத்தாளர் சா.கந்தசாமி, சென்னை தொலைக்காட்சி முன்னாள் செய்தி ஆசிரியர் எச்.ராமகிருஷ்ணன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஒய்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏ.நடராஜனிடம் தாங்கள் கொண்டிருந்த நட்பு குறித்துப் பேசினர்.
முன்னதாக ஏ.நடராஜனின் உருவப் படத்துக்கு ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *