வருமான வரித்துறை சோதனை குறித்த உண்மை நிலையை, மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்,” என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து, சேலத்தில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில், அரசியல் உள்நோக்கம் உள்ளதா எனும் மக்களின் சந்தேகத்துக்கு, அத்துறை, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசியல் சூழலில், தற்போது நடக்கும் சோதனை குறித்த உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டியது, அவர்கள் கடமை. ஆர்.கே., நகர் தேர்தல் தொடர்பாக, அமைச்சர் வீட்டில் நடந்த சோதனை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை, ஓராண்டாக நடத்தாதற்கு, தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மழையால், டெல்டா மாவட்டங்களில், 93 லட்சம் ஏக்கர் பயிர் மூழ்கி, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை காப்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு இன்சூரன்?ஸ, அரசு ஏற்க வேண்டும். குடிமராமத்து பணிக்கு, அரசு நிதி ஒதுக்கியது. அதை முறையாக செய்திருந்தால், டெல்டா மாவட்டங்களில் இந்த அளவு சேதம் ஏற்பட்டிருக்காது. தி.மு.க., தலைவர் கருணாநிதியை, பிரதமர் சந்தித்தது, அரசியல் நாகரீகம். சேலத்தில், விமான சேவையை உடனே தொடங்க வேண்டும். ஸ்டேடியத்தில் நடைப்பயிற்சிக்கு கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. மேட்டூர் அணையில் இருந்து, கிழக்கு, மேற்கு பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். பெரியார் பல்கலையில், ஓராண்டாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இரும்பாலையை, தனியார் மயமாக்குவதை, மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
