மக்களின் மனநிலை தான் உண்மையான கருத்துகணிப்பு: ஜி.கே. வாசன் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக்கூட்டணி சாhபில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் மக்கள் மனதில் நல்ல மாற்றம் தெரிகிறது. 50 ஆண்டுகால திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தாமக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
50 ஆண்டுகாலமாக அதிமுக திமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாத நிலை இருந்தது. தற்போது மக்கள் நலக்கூட்டணி அந்த இருகட்சிகளையும் தூக்கி எரிந்து விட்டு வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஆளும் அதிமுக ஆண்ட திமுக ஆகிய இருகட்சிகளும் பணம் பலம் படைபலம் அதிகார பலத்தோடு போட்டியிட்டாலும் மக்கள் நலக்கூட்டணி மக்கள் பலத்தோடு இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.
திமுக அதிமுக ஆகிய இருகட்சிகளும் தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர். மக்களின் மனநிலை தான் உண்மையான கருத்துகணிப்பு அது தேர்தலுக்கு பின் தெரியவரும் என்றார்.
