குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில் சந்தித்து தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது ஜி.கே.வாசன் அவரிடம் வலியுறுத்தியதாவது: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது. கர்நாடக அரசும் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை.
இதனால் விவசாயிகள் மனமுடைந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இனிமேல் தொடரக்கூடாது. கச்சத்தீவு பகுதியில் தமிழர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக தொடர மத்திய அரசு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபோன்ற பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தினார்.
