அனைத்து அரசியல் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான், அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கிராமம் முதல் நகரம் வரை உள்ள சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தபடாமல் உள்ளதால், ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாசன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு உட்பட அனைத்துவிதமான இட ஒதுக்கீட்டிலும் உள்ள சதவீதத்தை முழுமையாக கடைப்பிடித்து, அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
