ஆண்ட கட்சி திமுக, ஆளும் கட்சி அதிமுக, இனி ஆளப்போகிற கட்சி தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தாமகா’, என ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேசினார்.
ஈரோடு மேற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் முருகன் மற்றும் கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு அருகே சித்தோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
நடைபெற உள்ள தேர்தல் மிக முக்கியமான தேர்தல். 50 ஆண்டு காலமாக ஊழல் ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. ஆளுகின்றவர்கள் ஒருபுறம் இலவசங்களை கொடுத்துவிட்டு மறுபுறம் மக்கள் பணத்தை கோடி கோடியாக சுரண்டுகின்றனர். எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஊழலற்ற நேர்மையான எளிமையானவர்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான வெளிப்படையான ஆட்சியை கொடுப்போம். ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியைப் பொறுத்தவரை சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளால் விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இருதரப்பிற்கும் பாதிப்பில்லாத வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கரும்பு, மஞ்சளுக்கு ஆதாரவிலை கிடைக்கச் செய்வோம். ஆண்ட கட்சி திமுக, ஆளும் கட்சி அதிமுக, இனி ஆளப்போகிற கட்சி தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தாமகா’, என்றார்.
