காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
”தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின்கீழ் 1,369 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8 ஆயிரத்து 706 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.
இவற்றில் 10 ஆயிரத்து 500 கிராம சுகாதார செவிலியர்களும், 1,400 பகுதிநேர சுகாதார செவிலியர்களும், 385 சமுதாய நலச் செவிலியர்களும் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் நோய் தடுப்பு, மகப்பேறு உதவிகள், தாய்-சேய் நலன் என மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
பதவி உயர்வு, காலியாக உள்ள 2 ஆயிரத்து 500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராமப்புற மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
