தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களில் பல்வேறு மொழி, கலாச்சாரம், பல்வேறுப் பாடத்திடங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இச்சூழலில் பொதுவான நீட் தேர்வு தேர்வு முறையை கட்டாயப்படுத்துவது மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
தற்போதுள்ள கல்வி முறையையின்படி நீட் தேர்வு முறை அனைத்து மாநில மாணவர்களுக்கும் உகந்ததல்ல. நீட் தேர்வு முறையை மாணவர்களிடையே திணிப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் என ஒட்டு மொத்த தமிழகமே நீட் தேர்வு முறையை எதிர்க்கின்றன.
மேலும் பல மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கும், தங்களது ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் தாங்கள் ஒப்புதல் வழங்குவதன் மூலம் கிராமப்புற, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் என நம்புகிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
