திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் நடைமுறையை மத்திய, மாநில அரசுகள் உடனே நடைமுறை படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். நாடகம், நாட்டியம், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தேசிய கீதம் இசைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.
அதே சமயத்தில் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்தாய் வாழ்த்து இசைக்கும் செயல்பாட்டுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது போல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கபடுகிறதா என்று அரசு கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
