தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா திருவொற்றியூர் காலடிப்பேட்டை செயின் பால் தேவாலயத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் சி.பிஜு விழாவுக்கு தலைமை வகித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் 750 பேருக்கு சமையல் பாத்திரம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘இந்தியாவில் பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தாலும் இந்துக்களே பெரும்பாலும் உள்ளனர். பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்படுகிறது. பெரும்பான்மை, சிறுபான்மை மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். மதம் நம்மை பிரித்துவிட கூடாது என காந்தி கூறினார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாக்க சில தீய சக்திகள் முயற்சிக்கின்றனர். அந்த தீய சக்திகளை கட்டுப்படுத்தும் முதன்மை இயக்கமாக தமாகா பணியாற்றும்’’ என்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ அரசு தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வீட்டில் சோதனை என்பது ஆட்சியாளர்களின் பலவீனத்தை காட்டுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். தவறு நிரூபிக்கப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த சோதனை குறித்து வெளிப்படையான அறிக்கை தேவை’’ என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, இருதயம், பால்ராஜ் நூர்துசாமி, ஜோசப், ஈனோஸ், மைக்கேல்ராஜ், இனிகோ இருதயராஜ், தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், நிர்வாகிகள் கோவை தங்கம், கத்திப்பாரா ஜெனார்த்தனன், வேணுகோபால், ஞானசேகரன், சக்திவேல், விடியல்சேகர், முனவர் பாட்ஷா, திருவேங்கடம், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், சுனில்ராஜா சுகுமார், முருகன், பொன்.வில்சன், விமல்தாஸ், ராஜ்குமார், அனுராதா அபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ராம்ராஜ் நன்றி தெரிவித்தார். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101286#sthash.bPoaHQEJ.dpuf
