தமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனுக்கு ஆதரவு கேட்டு, தமாகா மாநிலத் தலைவர் திரு.ஜி.கே. வாசன் சாத்தான்குளத்தில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது இளைஞர்கள் மாற்றம் தேவை என மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தர தயாராகி வருகின்றனர். காமராஜர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நெய்வேலி திட்டம் மூலம் தமிழகத்துக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கிறது. அதன்பின் வந்த தமிழகத்தை ஆண்ட கட்சியில் எதுவும் செய்யவில்லை. சிறந்த நல்லாட்சி அமைத்து அனைத்து துறைகளிலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை தலைநிமிர செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்படுத்தும். எங்களுக்குதான் மக்களின் பலம் உள்ளது. எங்கள் கூட்டணி வென்று காமராஜர் ஆட்சியை கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய இந்தக் கூட்டணி உகந்தது. எங்கள் கூட்டணி ஆட்சியில் தவறு இருந்தால் தட்டி கேட்க தயங்க மாட்டோம். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி காட்ட முடியும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தமாகா வேட்பாளராக விஜயசீலன் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வாக்கு சேகரித்தார். ஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி #gkvasan
