“சொன்னீங்களே… செஞ்சீங்களா…?” மோடியை விளாசும் ஜி.கே.வாசன்

மிழ் மாநிலக் காங்கிரஸின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், திருச்சி, சமயபுரம் டோல்கேட் சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஜி.கே.வாசன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜி.கே வாசன்,

“உள்ளாட்சித் தேர்தலில், த.மா.கா அதிக இடங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும். தற்போது, வாக்காளர்களின் மனநிலை மாறி உள்ளது. நேர்மை, வெளிப்படைத்தன்மை போன்ற விஷயங்களில் விழிப்புஉணர்வு உண்டாகி உள்ளது. த.மா.கா-வினர் வாக்காளர்களை சந்தித்து அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் சூழலுக்கேற்றபடியும், தொண்டர்களின் மனநிலையைஅறிந்தும் செயல்படுவோம். உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக்கு உடனே அவசியம் இல்லை.

நீதிமன்ற உத்தரவின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,231மதுபான கடைகளை மூடவேண்டும். இதனால் 25,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக்கூறி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூட மறுப்பது ஏன்? என்பது புரியவில்லை. டாஸ்மாக் கடைகளை மூட அவகாசம் ஏன் கேட்டிருக்கிறார்கள்? வருவாய் முக்கியமா? உயிர் முக்கியமா? என மக்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர், ”மத்திய அரசு, நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவது ஏற்புடையது இல்லை. இப்போது, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்’ என்ற கோரிக்கையோடு மக்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் ஓரணியில் நிற்கிறார்கள். இந்த விவகாரத்தில், தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கும் மத்திய அரசு, ‘நம்பிக்கைத் துரோகம்’ செய்வதாகப் புதுக்கோட்டை – நெடுவாசல் பகுதி மக்கள் நம்புகிறார்கள். எனவே, இந்த மாவட்ட மக்களின் கோரிக்கையை மத்திய அரசு பிரதிபலிப்பதே நல்லதொரு தீர்வாக இருக்கும்.

லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும். எனவே, போராட்டம் நடத்தும் லாரி உரிமையாளர்களிடம், அரசாங்கம் சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு  தீர்வு காணவேண்டும். இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே நகரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு விதிமுறைகளை, எந்தக் கட்சியும் மீறக் கூடாது. தேர்தல் நியாயமாக நடக்கவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கு யார் வெற்றிபெறுவார்கள் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிடுகிறார்கள். மக்கள் கணிப்புதான் இறுதியானது.மேலும் தமிழகத்தில் மறுதேர்தல் வருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

‘விவசாயிகள் நலனில் அக்கறையோடு செயல்படுவோம்’ என பி.ஜே.பி அரசு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூறியதை நினைவு கூற விரும்புகிறேன். அதைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும். பராமுகமாக இருக்கக் கூடாது. டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு, முன்வர வேண்டும்.

சமீபகாலமாக அரசியல் தலைவர்கள் இஷ்டத்துக்கு விமர்சனம் செய்யும்போக்கு தொடர்கிறது. அரசியல் தலைவர்கள், விமர்சனம் செய்யும்போது தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை அரசு தடுக்கவில்லை. இதனால் சுரண்டப்படும் கனிமவளக் கொள்ளைக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க த.மா.கா சார்பில், அரசிடம் வேண்டுகோள் வைப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *