சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்: வாசன் பேச்சு

பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க கூடாது, விவசாயிகளின் நலன் காத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்,

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து சிறு வணிகர்களை முடக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் த.மா.கா. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது-

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது தான் அனைத்து தரப்பினரின் கோரிக்கை. ஆனால் அதற்காக முதலில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்காகவும் குரல் கொடுப்பதும் த.மா.கா.தான்.

துப்பாக்கி தோட்டாக்கள், பாராளுமன்ற மேற்கூரை என முக்கியமான பணிகளுக்கு சேலம் உருக்காலை இரும்புதான் பயன்படுத்தப்படுகிறது. கெயில் நிறுவனத்தின் கீழ் உள்ள 14 ஆலைகளில் சேலம் உருக்காலையை தனியாக பார்க்கும் போது லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையை மத்திய அரசு நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு விற்க முயல்கிறது. இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

சென்னையில் த.மா.கா. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டமும், வருகிற 23-ந் தேதி சென்னையில் கட்சி சார்பில் மரம் நடும் விழாவும் நடத்தப்படும். மதுரையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

செல்லாத நோட்டு பிரச்சனையால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அண்டை மாநிலங்கள் தண்ணீர் கொடுப்பதில்லை, அதனை மத்திய அரசு தட்டி கேட்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *