காஸ் விலையை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறுபவரும் வரும் ஜனவரி முதல்  மானியவிலையில் சமையல் காஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய  வேண்டும்.ஆண்டுதோறும் பொதுமக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து, மானியத்தை குறைத்ததால் மத்திய அரசுக்கு  ஆண்டுக்கு சுமார் ரூ.74 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகிறது.

எனவே, இந்த தொகையை கிராமப்புற கூலித் தொழிலாளர்களுக்கு இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர்களை வழங்குவதற்கும் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு  காஸ் சிலிண்டருக்கான மானியத்தை உயர்த்தி, அதற்கான விலையை குறைத்து கொடுப்பதற்கும், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வரலாறு காணாத அளவிற்கு வெகுவாகக் குறைந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் காஸ் சிலிண்டர்களின் விலையை குறைத்து  கொடுப்பதற்கும் மத்திய அரசு முன்வர வேண்டும்.