காவிரி பிரச்சினை கடையடைப்பு போராட்டம்: தமாகா ஆதரவு

காவிரி பிரச்சினை தொடர்பான கடையடைப்பு போராட்டத்தில் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு மாதம் தோறும் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உடனடியாக அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் 19-ம் தேதியன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டு கூட்டம் முடிவு செய்துள்ளது.

இப்போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டி மேற்கண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். எனவே, தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி பிரச்சினையை முன் வைத்து நடக்கும் போராட்டத்தில் தமாகாவும் பங்கேற்கும். மேலும், மறைந்த எங்களது தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 19 அன்று தமாகா விவசாயிகள் தினமாக கொண்டாடவுள்ளது. அதனையொட்டி, திருவாரூரில் வரும் 19-ம் தேதி மாலை 06.00 மணி அளவில் எனது தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *