கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மேற்கொள்ளும் தற்போதைய புதிய முயற்சியை மத்திய அரசும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பறிபோகும் என்ற பயத்தில் 4 ஆவது முறையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்காமல் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொடுக்க கர்நாடக முதல்வர் ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணைக்கட்ட 5,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று புதிய அணைக்கட்டுவோம் என்று சித்தராமையா கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி பிரச்சனையை திசை திருப்பவே கர்நாடக அரசு இவ்வாறு செய்து வருவதாகவும், இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மேற்கொள்ளும் தற்போதைய புதிய முயற்சியை மத்திய அரசும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
