சென்னை, இலங்கை சிறையில் உள்ள 34 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு இலங்கையின் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழகத்தை சேர்ந்த 34 மீனவர்களை விடுவிக்கவும், தமிழக மீனவர்களின் 95 படகுகளை ஒப்படைக்கு மாறும் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை விரைவில் நடத்துவதற்கு உண்டான சுமூக சூழலை ஏற்படுத்தி கொடுக்க இலங்கையை வற்புறுத்த வேண்டும்.கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இருநாட்டு மீனவர்களுக்கும் ஒரு நிரந்தரமான நல்ல தீர்வு ஏற்படுத்தி தர, ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட மத்திய பா.ஜ.க. அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவசர நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
