இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால்தலை நீக்கும்முடிவு மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்:
ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை :–
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி ஆகியோரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலைகளை பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ள மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல.
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இனிமேல் வரும் அஞ்சல் தலைகளில் படங்கள் இடம்பெற செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதற்காக ஏற்கனவே நவீன இந்தியாவை கட்டமைத்தவர்களின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலைகளை திரும்பப்பெறுவதாக மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது.
அன்னை இந்திரா காந்தி ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்.
மன்னர் மானியத்தை ஒழித்து வங்கிகளை தேசிய மயமாக்கி, வங்கிகள் மூலம் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் கொள்கைத்திட்டங்களை வகுத்து நாட்டினை 20 அம்ச திட்டத்தின் மூலம் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர்.
அமரர் ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சட்டத்தைக் கொண்டு வந்து பெண்களுக்கு உள்ளாட்சியில் இட ஒதுக்கீட்டினை வழங்கி, பெண்களின் உரிமைகளை நிலைநாட்டியவர்.
நம் நாட்டில் கணினியை அறிமுகப்படுத்தி, விஞ்ஞான தொழில் நுட்பத்துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவை கொண்டு சென்ற பெருமை பாரத ரத்னா ராஜீவ் காந்திக்கு உண்டு.
இப்படி நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்காகவும், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காகவும் உயிர் தியாகம் செய்த அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவது என்பது ஏற்கத்தக்கதல்ல.
நாட்டிற்காக பல்வேறு துறையில் அரும்பணி ஆற்றியவர்களின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலைகளை வெளியிடுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அதே நேரத்தில் ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் தலைவர்களின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலைகளை திரும்பப் பெறுவதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே மத்திய பா.ஜ.க அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
