சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இந்த இடைத்தேர்தலில் த.மா.கா. பங்கேற்பது குறித்து நிர்வாகிகள், செயல்வீரர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
த.மா.கா கட்சி ஆரம்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்த பிறகு மாநில அளவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வட்டார நகர, கிராம அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
எனவே த.மா.கா.வைப் பொருத்த வரையில் இயக்கத்தை விரிவுப்படுத்தும் பணியிலும், முழு வடிவம் பெறுகின்ற நிலையிலும் செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம்.
ஜனநாயகத்தில் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமை. பொதுவாக இடைத்தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கணக்கின்ற தேர்தலாகவே அமைய வேண்டும்.
ஆனால் அந்த காலக்கட்டங்கள் எல்லாம் மாறி ஆளும் கட்சியே வெற்றி பெறுகின்ற நிலை உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 2001–ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 22 இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளன என்பதை தேர்தல் முடிவுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அதனடிப்படையில் அண்மையில் நடைபெற்ற திருவரங்கம் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை.
இந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுவதற்கான எந்த சூழ்நிலையும் உருவாகவில்லை.
எனவே இந்த மாதம் 27–ந்தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.மா.கா. பங்கேற்காது என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)
