தஞ்சாவூர் : தஞ்சையில், நாளை(8ம் தேதி) த.மா.கா., சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்துக்கு, விவசாயிகளை திரட்டும் முயற்சியில், வாசன் ஆதரவாளர்கள் தீவிரமாகியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற கட்சியை துவக்கியுள்ளார். புதிய கட்சி துவங்கி, 10 நாட்களான நிலையில், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக, அக்கட்சி சார்பில், தஞ்சை ரயிலடி திடலில், நாளை காலை நடைபெறவுள்ள ஆர்பாட்டத்துக்கு வாசன் தலைமை வகிக்கிறார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடைபெறவுள்ள த.மா.கா. வின் முதல் போராட்டம் என்பதால், அ.தி.மு.க., – தி.மு.க.,- தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை போல் கூட்டத்தை காட்ட, வாசன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள த.மா.கா.,வினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களிலிருந்து, விவசாயிகளை திரட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்வதற்கான பணியகளில் வாசன் ஆதரவாளர்கள் தீவிரமாகியுள்ளனர்.த.மா.கா., ஆர்பாட்டத்தால் தஞ்சை ரயிலடி திடல் நாளை களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினமலர்
