பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: ஆந்திர அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு பாய்ந்து வருகின்ற பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் அம்மாநில அரசு 30 தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் பாய்கின்ற பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு 21 தடுப்பணைகளை கட்டி அம்மாநில விவசாயத்திற்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீரை தேக்கி பயன்படுத்தி வருகிறது.

இப்படி ஆந்திர அரசு பாலாற்றின் துணை ஆறுகளில் ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளால் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் பாலாற்றின் தண்ணீரை நம்பியுள்ள தமிழகத்தில் குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளது.

அதாவது கர்நாடகவில் இருந்து பாய்ந்து வருகின்ற பாலாறு ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்துக்கு வரும் போது பாலாற்றின் தண்ணீரால் விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு, குடிநீராகவும் பயன்படுகிறது.

இச்சூழலில் தற்போது ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட கருத்துருவை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் நதிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மாநிலங்களுக்கு இடையே பாய்கின்ற ஆறுகளில் எந்த ஒரு மாநில அரசின் சம்மதம் இல்லாமல் புதிது புதிதாக தடுப்பணைகள் கட்டக்கூடாது என்பது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கண்டிப்போடு எடுத்துக்கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்ட மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *