நெசவாளர்கள் நலன் காக்க வாசன் முன்வைக்கும் 15 கருத்துகள்

மத்திய அரசால் விசைத்தறி வாரியம் செயல்படுவது போல தமிழக அரசும் விசைத்தறி வளர்ச்சிக்காக விசைத்தறி வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கருத்துகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்வைத்துள்ளார்.

வாசன் முன்வைக்கும் 15 கருத்துகள்

* தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி கூடங்களைப் பற்றிய கணக்கெடுப்பை எடுத்து வருகிறது. இக்கணக்கெடுப்பு சரியாக, துல்லியமாக நடைபெற வேண்டும் என்பதுதான் விசைத்தறி தொழில் புரிவோரின் எதிர்பார்ப்பு.

* மத்திய, மாநில அரசுகள் இக்கணக்கெடுப்பை நடத்துவதன் நோக்கம் விசைத்தறி தொழில் மேம்பட வேண்டும் என்பதே.

* விசைத்தறி கணக்கெடுப்பு மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் பணி மிகவும் இன்றியமையாதது. அதாவது தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இந்த கணக்கெடுப்பை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* கணக்கெடுப்பில் ஈடுபடுவோர்கள் விசைத்தறி கூடத்துக்கு சென்று நேரடியாக விசைத்தறி கணக்கெடுப்பில் ஈடுபடும் போது உரிய ஆவணங்களை முறையாக, சரியாக சரிபார்க்க வேண்டும்.

* விசைத்தறி கூடத்திற்கான தனியான மின் இணைப்பு குறித்தும் சரிபார்க்க வேண்டும்.

* விசைத்தறி சங்கங்களுக்கு உட்பட்ட எந்த ஒரு விசைத்தறியும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் மூலம் விசைத்தறிக்காக அரசு வழங்கும் சலுகைகள், கடன் உதவிகள் போன்றவை அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கிடைத்திட வேண்டும்.

* விசைத்தறி தொழில் மேம்பட்டு, விசைத்தறி தொழிலாளர்களும், இத்தொழிலை நம்பியிருப்போர்களும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

* மத்திய அரசால் விசைத்தறி வாரியம் செயல்படுவது போல தமிழக அரசும் விசைத்தறி வளர்ச்சிக்காக விசைத்தறி வாரியம் அமைக்க வேண்டும்.

* கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை குறிப்பாக துண்டு, போர்வை, வேட்டி, சேலை போன்றவற்றை அரசு கோ ஆப்டெக்ஸ் மூலம் முழுமையாக கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும். இதன் மூலம் கைத்தறி தொழில் மேம்பட்டு, தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்.

* தற்போது பொங்கல் பண்டிகை வர இருப்பதால் கோ ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறி துணிகளை அதிக அளவில் விற்பனை செய்து தொழிலாளர்கள் நலன் காப்பதற்கும், அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கும் உடனடியாக உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

* நெசவாளர்களின் கூட்டுறவுக் கடன் முழுவதையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

* கைத்தறி, விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் துணிகளை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து இத்தொழிலை வளர்ச்சி பெறச் செய்வதோடு, வருமானத்தை பெருக்க வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.

* குறிப்பாக கைத்தறி, விசைத்தறி தொழிலை காப்பாற்றி, இத்தொழில்புரிவோரையும், இத்தொழிலை நம்பியிருப்போரையும் முன்னேற்றம் காண வழி வகுத்து தர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *