காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் அரசு தனிக்கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: காவேரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவேண்டும். அம்மாநிலத்தில் எழும் பிரச்னையை முன்வைத்து தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது சரியல்ல.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனுச்செய்வதாக கர்நாடகம் அறிவித்திருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும். தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் தரவேண்டும்.
காவேரி பிரச்னையில் அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டியது அவசியம். ஆனால், மக்கள் பிரச்னைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் போராடுவதும் அவசியமானது.
காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தொடர்ந்து சிறுவாணி பிரச்னையும் தலைதூக்கியுள்ளது. ஆகவே தமிழக வாழ்வாதாரப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்று கூறினார்.
