மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொண்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழகத்தில் நீர்வளம் வெகுவாக குறைந்துள்ளதாக வாசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வள கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் வாசன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி நடைபெறாமல் போனதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நீர்வள கமிஷனின் எச்சரிக்கையை தொடர்ந்து, நீர் ஆதாரத்தை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
