பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய,மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மண்டல தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் தலைமை வகித்தார்.
இதில், ஜி.கே.வாசன் மேலும் பேசியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசால் தீர்க்க முடியும். ஆனால், தீர்வுகாண மறுக்கிறது. பேசித் தீர்க்க வேண்டிய நதிநீர்ப் பிரச்னைகள் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் மூன்றுமாநில மக்களைப் பிளவுபடுத்துகின்றன என்றார்.
இதில், மாவட்டத் தலைவர் ஜவஹர், புறநகர் மாவட்டத் தலைவர் ராமலிங்கம், மாநில நிர்வாகிகள் குனியமுத்தூர் ஆறுமுகம், சண்முகசுந்தரம், மாநில இளைஞரணிச் செயலாளர் யுவராஜ், திருப்பூர் மாவட்டத் தலைவர்கள் திருப்பூர் ரவி, பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
