சென்னை,
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்தர பிரதேசத்தில் அங்குள்ள ஏழைப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் சிலிண்டர் இணைப்பு, 2 சிலிண்டர்கள், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே மத்திய அரசு உத்தரப்பிரதேசத்தில் அடுத்து வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு இச்சலுகைகளை அரசியல் கண்ணோட்டத்தோடு வழங்கியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இத்திட்டம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஒடிசா, பீகார், கோவா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்ற செய்தியும் வெளிவந்திருக்கிறது. அப்படியென்றால் தமிழ் நாட்டிலும் அத்திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமல்லவா? அப்பொழுது தான் தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்கள் இலவசமாக எரிவாயு சிலிண்டர் மற்றும் உபகரணங்களை பெற வழி வகுக்கும்.
எனவே மத்திய அரசு இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய பா.ஜ.க. அரசு எரிவாயு சிலிண்டர் மானியத்தையும், சிலிண்டர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
