சென்னை : ஈரானில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 23 ஆம் தேதியன்று அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்கள் அந்த நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது வழி தெரியாமல் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது. எனவே, மத்திய அரசு உடனடியாக ஈரான் நாட்டுடன் தொடர்பு கொண்டு சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரான் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களை அந்த நாடு விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அப்பாவி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, தேவையான சலுகைகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
