தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
வாணியம்பாடி தொகுதியில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை ஜி.கே.வாசன் ராமநாயக்கன்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம் ஆகிய பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தை கடந்த 50 ஆண்டு காலமாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தும் நகரங்களில் முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கிராமப் பகுதிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லாமல் உள்ளன.
50 ஆண்டு காலமாக இரு கட்சிகளும் மாபெரும் ஊழல் செய்தது தான் மிச்சம். இந்தியாவிலே ஊழல் என்றால் தமிழகம் தான் என்ற கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அவப்பெயரிலிருந்து தமிழகத்தை மீட்க தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
