2016 ஆம் ஆண்டினை நாம் அனைவரும் இனிதே வரவேற்போம். கடந்த வருடம் தேசிய அளவில், தேச மக்கள் போதிய முன்னேற்றம் அடையமுடியவில்லை. சகிப்புத் தன்மை இல்லாமை, சமயச் சார்பற்ற கொள்கையைக் கேள்விக்குறியாக்குதல், பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை போன்றவற்றால் தேசமுன்னேற்றம் தடைப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் மழை, வெள்ளம் நம்மை வேதனைக்கும், சோதனைக்கும் உள்ளாக்கிவிட்டது. பாதிப்புக்கு உள்ளான மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இச்சூழலில் புத்தாண்டு – 2016 பிறக்கிறது. இந்த ஆண்டு எல்லோருக்கும், எல்லா நலனும் பயனுக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும். வேளாண்மை செழிக்க வேண்டும்; தொழில்கள் வளர வேண்டும்; தொழிலாளர் நிலை உயர வேண்டும்; வேலை வாய்ப்பு பெருக வேண்டும்; நலிந்தோர் நல்வாழ்வு பெற வேண்டும்; மகளிர் ஆடவருக்கு இணையாக உயர வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் அனைத்துப் பிரிவு மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்; இறைவனும், இயற்கையும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.
தமிழகம் வளரவும், உயரவும், சிறக்கவும் புத்தாண்டு வழி காட்ட வேண்டும் என விழைகிறேன். இனிய புத்தாண்டை வரவேற்கிறேன். நான் நெஞ்சார நேசிக்கும் தமிழ் மக்களுக்கு என் நம்பிக்கை நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
